Chillzee KiMo Books - என் கனவு தேவதையே... - பிந்து வினோத் : En kanavu devathaiye... - Bindu Vinod

என் கனவு தேவதையே... - பிந்து வினோத் : En kanavu devathaiye... - Bindu Vinod
 

என் கனவு தேவதையே... - பிந்து வினோத்

இது ஒரு ஷார்ட், சிம்பிள் & ஸ்வீட் காதல் கதை :-)

உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்!

 

அத்தியாயம் 01

சென்னை சர்வதேச விமான நிலையம்

விமான நிலையத்தில் இருந்த சுங்கத்துரையின் சோதனையை தாண்டி வந்த சதீஷ்குமார், ஒரு முறை மூச்சை இழுத்து வெளியேற்றினான். நான்கு ஆண்டுகளுக்கு பின் சுவாசித்த சென்னையின் கொஞ்சம் பொல்யுட் ஆன அந்த காற்று மனதிற்கு இதமாக இருந்தது.

வெளியில் வந்து, கூட்டத்தில் பெற்றோரை தேடினான். வெகு நேரம் தேட வேண்டிய அவசியம் இல்லாமல், “சதீஷ்...” “அண்ணா...” “கண்ணா...” என பரிச்சயமான குரல்கள் அவனை அழைத்தன.

“அம்மா...” வொர்ல்ட் கப் வென்ற கேப்டனை போல ஓடிப் போய் அம்மா ஈஸ்வரியை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

“எப்படிடா இருக்க எஸ்.கே?”

“பார்த்தா தெரியலைம்மா? சூப்பர் ஸ்மார்ட்டா இருக்கேன்ல???”

“ஸ்மார்ட்டா? லைட்டா தொப்பை தெரியுது!” என்று கிடைத்த வாய்ப்பில் அண்ணனை கலாட்டா செய்தாள் சுப்ரியா.

“அம்மா சாப்பாடு சாப்டாம ரெடி டூ ஈட் சாப்பாடா சாப்பிட்டா அப்படி தான் இருக்கும்டி!”

“அதெல்லாம் இல்லை பீர் அடிச்சா தான் தொப்பை வருமாம்!”

“அடிப்பாவி உனக்கு எப்படி இதெல்லாம் தெரியுது??? எனக்கு அதை பத்தி எல்லாம் தெரியவே தெரியாது!”

“நீ எல்லாம் அமெரிக்கா போனதே வேஸ்ட்டா எஸ்.கே!” என்று மகளுடன் கூட்டணி அமைத்து மகனை கலாய்த்தார் சரவணன்.

“அப்பாவும் பொண்ணும் சும்மா இருங்க! பாவம் என் குழந்தை இரண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கான். சும்மா அவனைப் போய் கலாட்டா செய்துட்டு இருக்கீங்க” என்று சதீஷுக்கு சப்போர்ட் செய்தாள் ஈஸ்வரி.

“இந்த காலத்து பிள்ளைங்க பத்தி தெரியாம உன் பிள்ளையை தலைக்கு மேல தூக்கி வைக்குற ஈஸ்வரி! பாவம் நீ!”

“வாவ் அம்மா நீங்க செம ஸ்ட்ராங்கான வுமன் ம்மா!!!!” என்றாள் சுப்ரியா சீரியஸாக!

இவள் ஏன் அப்படி சொல்கிறாள் என்று புரியாமல் மற்றவர்கள் விழித்தார்கள்!

“என்னடி லூசு சொல்ற?”

“உன் வெயிட்டுக்கு உன்னை அம்மா தலைக்கு மேல தூக்கி வைக்குறதுன்னா அவங்க எவ்வளோ ஸ்ட்ராங் வுமனா இருக்கனும்???”

“ஹையோ கடிக்குறாளே!” என்று அலுத்துக் கொண்டாலும் சதீஷால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

இப்படியே பேச்சு, சிரிப்பு, கலாட்டா என்று வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

விடிகாலை நேரம் என்றாலும் பெட்டிகளை அன்பேக் செய்து அவர்கள் மூன்று பேருக்காகவும் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்ததை எடுத்துக் கொடுத்தான் சதீஷ்.

“இவ்வளவையும் நீயா தேடி வாங்குனீயா எஸ்.கே?? பாவம்டா நீ... என் செல்லம்...” என்று ஈஸ்வரி செல்லம் கொஞ்ச,

“நீயே சூட்கேஸ்ல பொருள் எல்லாம் வேற பேக் செய்திருப்ப. எவ்வளவு வேலை இருந்திருக்கும்” என்று சரவணனும் மகனின் அன்பில் நெகிழ்ந்து சொன்னார்.

“க்கும்... அவன் என்ன எல்.கே.ஜி படிக்குற பேபியா? ஒரு இரண்டு பெட்டியை நிரப்பி எடுத்துட்டு வந்ததுக்கு என்னவோ சந்திரயான்ல மூனுக்கு போயிட்டு வந்த மாதிரி பில்ட்-அப் கொடுக்குறீங்க இரண்டுப் பேரும்!”

“இவளுக்கு பொறாமையை பாருங்கம்மா”

“சுப்ரியா பொறாமைப் பட்டா பரவாயில்லை! ஊருல இருக்கவங்க மொத்த பேரும்ல உன் மேல கண்ணுப் போட்ருக்காங்க. முதல்ல ஊருக்குப் போகனும்...”

“ஊருக்கா? எதுக்கும்மா???”

“இதை எல்லாம் தூங்கி எழுந்துப் பேசலாம் எஸ்.கே.! இப்போ போய் தூங்கி ரெஸ்ட் எடு!”

சதீஷுக்குமே படுது ஓய்வெடுக்க வேண்டும் போல இருந்ததால் மறுக்காமல் குட் நைட் சொல்லிவிட்டு அவனுடைய அறைக்கு சென்றான்.

உடனே உடை மாற்றி படுக்கையில் விழுந்தாலும் தூக்கம் வரவில்லை.

கண்களை இறுக மூடி தூங்க முயன்றான்... ஹுஹும்... ஒன்றும் நடக்கவில்லை...

தூக்கம் வரும் போது வரட்டும் என்று மனதை அதன் போக்கில் யோசிக்க விட்டான்...

அவன் எதிர்பார்த்தது தான் நடந்தது...!

முகம் தெரியாத அவள் அவன் கண் முன்னே தெரிந்தாள்... நளினமாக சேலை கட்டியிருந்தவளின் முகத்தை பார்த்து விடும் ஆசையில் அவள் பக்கம் ஓடினான் அவன்...

அடுத்த வினாடி காற்றில் கரைந்து காணாமல் போனாள் அவள்!

எப்போது தான் உன் முகத்தை காட்டுவாய் என் கனவுக் கன்னி???!!! ஏமாற்றமும் ஏக்கமுமாக அவனுக்குள்ளே கேட்டுக் கொண்டவன்... அப்படியே தூங்கிப் போனான்!