Chillzee KiMo Books - மாயக்கோட்டை - மின்னல் - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Maayakkottai - Minnal - Srija Venkatesh

மாயக்கோட்டை - மின்னல் - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Maayakkottai - Minnal - Srija Venkatesh
 

மாயக்கோட்டை - மின்னல் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

மலைகளிலேயே மிகவும் பழமை வாய்ந்த மலையான பொதிகை மலைப்பகுதிகளே இந்த மாயக்கோட்டை - மின்னல் என்ற இந்த நாவலின் கதைக் களம்.  பொதிகை மலையின் உச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காணிகள் என்னும் பழங்குடியினரை இப்போதும் நீங்கள் காணலாம். அவர்களது வாழ்க்கை, உணவுப்பழக்கம், கல்வி இவைகளை நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறேன். இதைக் கதை என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. காரணம் காணிகள் என்னும் நேர்மையான மக்கள் தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருந்தும் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இந்த நாவல் அவர்களது வாழ்க்கையைச் சொல்லும் காவியம். இயற்கையையே கடவுளாக வணங்கும் ஆதித்தமிழனின் நீட்சியாக இவர்கள் விளங்குகிறார்கள். தூய தமிழ்க் சொற்கள் பல இவர்களது பேச்சு வழக்கில் உள்ளது. காடும் அது தரும் கனிகளும் காய்களுமே அறிந்த இவர்களுக்கு தங்கம் தெரியாது என்பது தான் வியப்பு. 

 நாங்கள் குடும்பத்தோடு பொதிகை மலையின் மேல் கொலுவீற்றிருக்கும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு சென்றிருந்த போது அங்கிருந்த சங்கிலி கருப்பனும், பிரம்ம ராட்சசி அம்மனும் என்னை ஊக்குவித்து ஆசி வழங்கினார்கள். இந்தக் கதை என்னை ஒரு கருவியாகக் கொண்டு தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்றால் மிகையாகாது. இந்தக் கதையில் உலவும் மின்னல், மகிழி மற்றும் இதர பாத்திரங்கள் காற்றின் மூலம் என் மனதில் கதை சொன்னார்கள். காற்றில் இருந்த அந்த அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது.

நிச்சயம் இது ஒரு புனைகதை தான். ஆனால் ஏன் இப்படியும் நடக்கக் கூடாதா? என உங்களை ஏங்க வைக்கும் நிச்சயம். நடந்திருக்க வாய்ய்ப்பு இல்லாமல் இல்லை என்று சிந்திக்கவும் வைக்கும். 

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை காடுகள், நதிகள் என இயற்கை அன்னை தன் கருணையை நம்மீது  பொழிந்திருக்கிறாள் . ஆனால் நாம் அவற்றைக் காப்பாற்றுகிறோமா? என்றால் இல்லை என்ற பதில் தான் முகத்தில் அடிக்கிறது. காடுகள் இருந்தால் மட்டுமே நாடு நலமாக இருக்கும் என்பதை இன்றைய சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் நம்மிடம் சொல்கின்றனர். ஆனால் இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து காடுகளைக் காப்பாற்ற என்றே சிலரை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். அவர்கள் தான் காவல் தெய்வங்களாக வனப்பேச்சியாக, சங்கிலி கருப்பனாக ஐயனாராக அருள் பாலிக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் நாமோ அவர்களது வழிபாடு என்ற போர்வையில் கடுமையான ஒலி மாசினை உருவாக்குவதோடு குப்பைகளையும் போட்டு வருகிறோம்.படித்த நாம் நம் குழந்தைகளுக்கு காடுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் அதனைப் பாதுக்கப்பது பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது தான் நாம் நம் நாட்டுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து. 

இந்த நாவலில் இன்றைய இளைஞர்கள் மூவர் சேர்ந்து காட்டினை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன். அவர்களோடு மாயக்கோட்டை என்பது என்ன? மின்னல் யார்? மகிழி யார்? மீகாமர்கள் என்றால் என்ன? என்று பலவிதமான கேள்விகளுக்கான பதிலாக அமையும் இந்த நாவல். மனித சக்தியோடு தெய்வ சக்தியும் இணையும் போது எப்படிப்பட்ட அற்புதங்கள் நடக்கும்? மனித சக்தி விரும்பி அழைத்தால்  தெய்வம் நிச்சயம் நம்மைக் காக்கும். இவைகள் தான் நமது வாழ்க்கையின் அடிப்படை நம்பிக்கைகள். ஆனால் தெய்வ சக்திக்கே சவாலாக விளங்கும் தீய சக்திகளும் உண்டு. அவைகளும் மனிதர்கள் என்ற போர்வையிலே தான் நடமாடும். நாட்டின் நலனுக்கும் நமது குடும்பங்களின் நலனுக்காகவும் இந்த தீய சக்திகளை வேரறுப்பது மிகவும் முக்கியம். 

தீய சக்திகள் மிகப்பெரிய சக்திகளாக எதையும் செய்ய முடிந்த துணிந்த சக்திகளாக தன்னை காட்டிக்கொள்ளும். ஆனால் உண்மை என்பதும் தெய்வ சக்தி என்பதும் எளிமையாக அமைதியாக இருக்கும். தீய சக்திகளின் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்துக்கொண்டு அவற்றின் நேரம் முடியும் போது மிக அழகாக அவற்றை அழித்துக் காட்டுவதே தெய்வீகம். அப்படிப்பட்ட தெய்வீகம் தான் இந்த நாவலிலும் இடம் பெற்றுள்ளது. இது நிச்சயம் ஆன்மீக நாவல் அல்ல. ஆனால் நம் வாழ்க்கையில் கடவுட் தன்மை எப்படிப் பின்னிப்பிணைந்து இருக்கிறதோ ஏதே போல இந்த நாவலிலும் கடவுட் தன்மை பின்னிப்பிணைந்துள்ளது. கதை மாந்தர்கள் யாரும் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் அல்ல. ஆனால் மன உறுதியும், ஊக்கமும் உள்ளவர்கள். இந்த நாவலைப் படித்து முடித்ததும் நாமும் ஒரு முறை பொதிகை மலையைச் சென்று பார்க்க வேண்டும், அங்குள்ள கணிகளோடு பேச வேண்டும் சொரிமுத்தையனாரின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும் என்ற ஆவல் நிச்சயம் எல்லோரிடமும் தோன்றும். அப்படித்தோன்றினால் அதுவே இந்த நாவலின் வெற்றி. 

நீங்கள் நாவலுக்குள் செல்லு முன் மிக முக்கியமான விவரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நாவலிம் மணி மரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மரம் எனது கற்பனை அல்ல. உண்மையாகவே இன்றும் சொரிமுத்தையனார் கோயில் பிரகாரத்தில் உள்ளது. வேண்டிக்கொண்டு மணி கட்டினால் அதனை அந்த மரம் உள் வாங்கும் அதிசயத்தை நாமே கண்ணால் பார்க்கலாம். அதற்கான படத்தையும் இந்த நூலின் இறுதியில் அளித்துள்ளேன். ஆகவே வாசகர்கள் பொதிகை மலைக்கு சென்று வாருங்கள் . அங்குள்ள மரங்களுக்கும் விலங்குகளுக்கும்  எந்தக் கேடும் விளைவிக்காமல், சுற்றுச் சூழலை பாழாக்காமல் நல்ல குடி மக்களாக நீங்கள் கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அப்படி சுற்றுச் சூழலை கெடுக்கும் நபர்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடாமல் அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தால் நாமும் மீகாமர்களே! சொரிமுத்தையனாரும், வனப்பேச்சியும், பிரம்ம ராட்சசி அம்மனும், சங்கிலி கருப்பனும் வாழ்வில் நமக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். 

என்னுடன் மலை முழுவதும் சுற்றி காணிகளோடு உறவாடி இந்த நாவலில் பல திருத்தங்களைச் சொல்லி இதை எழுத உறுதுணையாக இருந்த என் கணவருக்கும் என் மகளுக்கும் என் நன்றிகள் பல. இதனை பதிப்பிக்க உதவிய திரு கிருபானந்தன் அவர்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். இந்த நூலை வாங்கி நல்ல ஒரு வாசிப்பு அனுபவத்துக்கு தயாராகும் வாசகர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகள் பல! வணக்கம்.

 

அத்தியாயம் 1:

 

நாள் 21.11.2018

 

சென்னை மெரீனா கடற்கரையில் அலைகள் வந்து வந்து மோதும் கரையோரம் மெதுவாக மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருந்தனர் பூஜாவும் அருணும். அவர்களுக்கு சற்று பின்னே பூஜாவின் தந்தையும் அருணின் தந்தையும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தனர். பெரியவர்கள் இருவரிடமும் பேச்சு சுவாரசியம். இளையவர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல பேசிக்கொண்டு தான் வந்தனர். ஆனால் இருவரின் பேச்சின் சாராம்சம் வெவ்வேறு. பெரியவர்கள் இருவரும் பூஜாவுக்கும் அருணுக்கும் எப்போது கல்யாணத்தை முடிக்கலாம் என பேசினர் என்றால் சம்பந்தப்பட்ட இருவரும் கடற்கரையில் இருக்கும் சுற்றுப்புற சீர்கேட்டைப் பற்றிக் கவலையோடு பேசினர். இளைஞர்கள் என்றாலும் இருவருமே மேல்படிப்பு சுற்றுப்புறவியல் படித்து விட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வந்தனர். மக்களுக்கு சுற்றுச் சூழல் பற்றியும் அது எப்படி சீர் கேடடைகிறது அதனால் நாம் எப்படி பாதிக்கப்படுவோம் என்பது பற்றியும் வீதி நாடகங்கள் மூலமும் பேச்சுக்கள் மூலமும் அறிவுறுத்தி வந்தனர். பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்ல முடியாது என்றாலும் சிலர் அவர்களது செய்கையால் மாறவே செய்தார்கள். நூறு பேருக்கு சொல்வோம் ஒருவர் மாறினாலும் நமக்கு வெற்றியே என்ற நோக்கோடு செயல்பட்டனர் இருவரும்.

 

பூஜாவின் தந்தை பெரியசாமியும் அருணின் தந்தை குமரகுருவும் பாலிய கால நண்பர்கள். பெரியசாமியின் தங்கையைத்தான் குமரகுரு திருமணம் செய்து கொண்டார் எனவே நட்பு உறவானது. குமர குருவுக்கு அருணும் அதைத்தொடர்ந்து மூன்று வருடங்களில் பெரியசாமிக்குப் பூஜாவும் பிறக்கவே இவனுக்கு இவள் தான் என அப்போதே முடிவு செய்து கொண்டனர். குமரகுருவுக்கு ஒரு தனியார் அலுவலகத்தில் பெரிய வேலை. பெரியசாமி தனது குடும்பத்தொழிலான ஜவுளி வியாபாரத்தைக் கவனித்து வந்தார். சிறு வயது முதலே பூஜாவும் அருணும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். வீட்டில் பொருளாதார பிரச்சனை இல்லை என்பதால் இருவராலும்  தங்கள் லட்சியத்தை நோக்கி நடக்க முடிந்தது.

 

நடைப்பயிற்சி முடிந்து பூஜாவின் வீட்டில் நுழைந்தனர் நால்வரும்.

 

"டிஃபன் எடுத்து வை சாந்தி! குமாரும் வந்திருக்கான் பாரு! எல்லாருக்கும் முதல்ல காப்பி கொண்டா. எனக்கும் காப்பியில ரெண்டு ஸ்பூன் சக்கரை போடும்மா" என்றார் பெரியசாமி.

 

"அப்பா! சர்க்கரை போட்டு காப்பி சாப்பிட்டா நீங்க ஓடினதுக்கு பலனே இல்ல! "

 

"அடபோம்மா! நாக்கு செத்து போச்சு! ஒரு ஸ்பூனாவது போட்டுக்கறேனே" என்று கெஞ்சினார் மகளிடம். சிரித்துத் தலையசைத்தாள் பூஜா.

 

"நாம பேசுனதை இவங்க கிட்ட சொல்லுடா சாமி" என்று எடுத்துக்கொடுத்தார் குமரகுரு.

 

இளைஞர்கள் இருவரும் கேள்விக்குறியோடு பார்த்தனர்.

 

"இதைப்பாருப்பா அருண்! எங்களுக்கும் வயசாகிக்கிட்டே போகுது! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டா எங்களுக்கு நிம்மதி ஆயிடும். இன்னும் எத்தனை நாள் கல்யாணத்தைத் தள்ளிப் போடப் போறீங்க?"

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அருணின் பார்வையின் பொருளை புரிந்து கொண்ட பூஜா தாயின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.

 

"அம்மா! நாங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு சொல்லலியே? எனக்கு இப்பத்தான் 22 ஆகுது. அருணுக்கு 25. அதுக்குள்ள என்னம்மா அவசரம்?