Chillzee KiMo Books - எப்போதும் அன்புக்கு அழிவில்லை - சசிரேகா : Eppothum anbukku azhivillai - Sasirekha

எப்போதும் அன்புக்கு அழிவில்லை - சசிரேகா : Eppothum anbukku azhivillai - Sasirekha
 

எப்போதும் அன்புக்கு அழிவில்லை - சசிரேகா

சில்ஸியில் நான் எழுதிய சிறுகதைகளை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

 

 

மழலைச் சொற்கள்  

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

எங்க சொல்லு, இங்க பாரு, நோட் புக் பார்க்காம அங்க என்ன வேடிக்கை ஷ்யாம் சொல்லு” என 3-வது வகுப்பு படிக்கும் ஷ்யாம்க்கு அவனது தாயார் ரூபா பள்ளியில் கொடுத்த ஹோம் ஒர்க்கை சொல்லிக் கொடுக்க அவனோ தாய் சொல்வதைக் கேட்க பிடிக்காமலும், ஹோம் ஒர்க்கை செய்யப் பிடிக்காமலும் சிறு தொலைவில் அவனது 1 வயது தம்பியின் விளையாட்டில் மூழ்கியிருந்தான்

”ஷ்யாம் அங்க என்ன வேடிக்கை, இங்க பாரு சீக்கிரமா ஹோம் ஒர்க் முடி? எனக்கு டைம் ஆகுது சொல்லு சீக்கிரம் இதை சொல்லிக்கிட்டே எழுது” என அவனிடம் போராடினாள். அவனும் மெதுவாக சொல்லிக் கொண்டே திருக்குறளை நோட்புக்கில் எழுதலானான்

”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என அந்த ஒன்றரை அடி குறளை 5 நிமிடம் திக்கித் திணறி சொல்லி எழுதி முடித்து தாயிடம் காட்டிவிட்டு எழ அவர் தடுத்தார்

”என்ன எழற, உட்காரு இன்னும் 10 முறை இதைச் சொல்லு அப்பதான் மனப்பாடம் ஆகும் சொல்லு” என ரூபா அதட்ட ஷ்யாமோ தம்பியின் விளையாட்டை ரசித்துவிட்டு  கோபமாக

”அம்மா போதும் நான் விளையாடனும்”

“ஹோம் ஒர்க் முடிச்சிட்டு விளையாடு” என சொல்லி அவனை பிடித்து வைத்து பாடம் எடுத்தாள்.

அடுத்து வேறு பாடம் சொல்லிக் கொடுக்கலானாள்

அவனும் அம்மா சொல்வதை சொல்லிக்கொண்டே இருக்க சிறிது நேரம் கழித்து அவனுக்கு மெலிதாக கொட்டாவியுடன் போர் அடிக்கவே

”அம்மா போதும் நான் போறேன்” என கத்த

”என்னடா பிரச்சனை உனக்கு” என ரூபா கத்த அவளது மாமனார் தியாகராஜன் அங்கு வந்து அமர்ந்தார்

”என்னாச்சிம்மா ஏன் என் பேரனை திட்டற?”

“பாருங்க மாமா ஹோம் ஒர்க் பண்ணாம சேட்டை பண்றான், இவனோட தினமும் நான் கஷ்டப்படறேன், இன்னும் சமைக்கனும், அவர் வேற வந்துடுவாரு, வந்ததும் லபோ திபோன்னு கத்துவாரு, அதுக்குள்ள நான் சப்பாத்தி தேய்க்கனும் இதுல இவன் வேற சேட்டை பண்றான். அங்கு குட்டி பையன் வேற விளையாடிக்கிட்டு இருக்கான். என்னால முடியலை மாமா” என அவள் ஆதங்கமாகச் சொல்ல

”சரி சரி இப்ப என்ன உன்னால முடியலையா, நான்தான் வீட்ல இருக்கேனே நான் ஷ்யாமை பார்க்கறேன் நீ போய் சமையலை பாரு” என சொல்ல அவரும் சென்றார்.

தாய் சென்றதும் தாத்தாவின் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்ட ஷ்யாமோ

”தாத்தா எனக்கு மட்டும் ஹோம் ஒர்க், ஏன் தம்பிக்கு இல்லை?”

“யார் சொன்னா இல்லைன்னு அவனும் ஹோம் ஒர்க் பண்றானே”

“எங்க பண்றான் விளையாடிக்கிட்டு இருக்கான்”

“என்னப்பா இப்படி சொல்ற அவன் படிச்சிக்கிட்டுதானே இருக்கான்”

“எப்படி?” என கேட்க அவர்களின் உரையாடலின் மத்தியில் ஆபிஸ் விட்டு வீடு வந்தான் ஷ்யாமின் தந்தை கார்த்திக், அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்தான். தாத்தாவோ அதை கவனியாமல் தன் பேரனிடம்

”நல்லா பாரு ஷ்யாம், உன் தம்பி கூட உயிர்மெய் எழுத்துக்களை சொல்றான் பாரு” என சொல்ல

”உயிர் மெய் எழுத்துக்களா அப்பா என்னாச்சி உங்களுக்கு, அவன் குழந்தை சரியாவே பேச வரலை, எதையாவது தப்பா சொல்லி கொடுக்காதீங்க சீக்கிரமா ஹோம் ஒர்க் முடிக்க வைங்க” என கார்த்திக் சொல்ல தாத்தாவோ

”டேய் எனக்கு நீ சொல்லாதடா, நான் சரியாதான் சொல்றேன் உனக்கு உயிர்மெய் எழுத்துக்கள் தெரியுமா தெரியாதா?”

“இது என்ன கேள்வி”

“பதில் சொல்லு?”

“தெரியும்”

“எத்தனை எழுத்தக்களை நீ பேசறப்ப பயன்படுத்தற?”

“இதை கூடவா யாராவது எண்ணி வைப்பாங்க”

“சொல்லு”

“ஏறக்குறைய முக்கால் வாசி எழுத்துக்கள்”

“மீதியிருக்கற எழுத்தக்களை ஏன் நீ பயன்படுத்தறதில்லை”

“அதெல்லாம் புழக்கத்திலேயே இல்லையேப்பா அப்புறம் எப்படி பயன்படுத்தறது?”

“எந்த எழுத்துக்கள் புழக்கத்தில இல்லைங்கற”