Chillzee KiMo Books - சினிமா சுவாரசியங்கள் - Chillzee Originals : Cinema suvarasiyangal - Chillzee Originals

(Reading time: 15 - 30 minutes)
சினிமா சுவாரசியங்கள் - Chillzee Originals : Cinema suvarasiyangal - Chillzee Originals
 

சினிமா சுவாரசியங்கள் - Chillzee Originals

கதைகளுக்கு விஷுவல் கொடுத்து நம் கண் முன் நடமாட செய்யும் சக்தியைக் கொண்டது சினிமா.

நாடு, மொழி எனும் எல்லைகள் இல்லாமல் உலகெங்கும் இருக்கும் சினிமா துறையில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் சில இங்கே இடம் பெற்றுள்ளது.

 

ஹீரோவை அறைந்த ஹீரோயின்!

  

டேப்ளாயிட் தலைப்பு செய்தி போல இருக்கும் இந்த தலைப்பு உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவம். அதுவும் வேறு நாட்டில் இல்லை, நம் நாட்டிலேயே நடந்தது தான்.

  

1960 – 70களில் ஹிந்தி சினிமாவின் முடி சூடா மஹாராணியாக விளங்கியவர் நடிகை நுடன். அவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கண்டவை. குறிப்பாக “சீமா”, “சுஜாதா”, “பந்தினி” போன்ற ஹிந்தி திரைப்படங்கள் இன்று வரை மிகவும் புகழ் பெற்றவை.

  

அந்தக் காலத்தில் திருமணத்திற்கு பின்னும் நடித்து புகழுடன் விளங்கிய வெகு சில நடிகைகளில் நுடனும் ஒருவர். நுடனின் கணவர் ரஜ்னீஷ் ஒரு கடற்படை லெப்டினன்ட்-கமாண்டர். நுடனின் நடிப்பு திறமையை புரிந்துக் கொண்டு சில, பல கட்டுப்பாடுகளுடன் அவரை நடிக்க அனுமதித்தார் அவரின் கணவர்.

  

பின் அறுபதுகளில் நுடன் சஞ்சீவ் குமாருடன் தேவி எனும் படத்தில் இணைந்து நடித்தார். அந்த காலக்கட்டத்தில் நுடனையும், சஞ்சீவ் குமாரையும் இணைத்து கிசு-கிசுக்கள் பரவத் தொடங்கியது.

  

இந்த செய்திகளால் நுடனுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் தோன்ற தொடங்கியது.

  

இதனால் வருத்தமும் பதற்றமுமாக இருந்த நுடன் ஒருநாள் படப்பிடிப்புக்கு வந்தப் போது சஞ்சீவ் குமார் பத்திரிக்கை நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

  

அப்போது வளரும் நடிகராக இருந்த சஞ்சீவ் குமார், தனது வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக வேண்டுமென்றே அவர்கள் நடுவே வேறு மாதிரியான உறவு இருப்பதாக தவறான செய்தி பரப்புவதாக நுடனுக்கு தோன்றியது.

  

நிருபர்கள் நுடன் பற்றி கேட்ட கேள்விகளுக்கு சஞ்சீன் குமார் பொய்யான பதில்களையும் கொடுக்கவும், பொறுமை இழந்த நுடன், அத்தனை பத்திரிக்கையாளர்கள், படப்பிடிப்பு குழுவினர் முன்னிலையில் சஞ்சீவ் குமாரை பளாரென கன்னத்தில் அறைந்தார்!

  

அங்கே இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள் என்று சொல்லவும் வேண்டுமா!

  

இறக்கும் வரை நுடன் தன் கணவர் ரஜ்னீஷுடன் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.