Chillzee KiMo Books - பெண்மையின் இயல்பு - சசிரேகா : Penmaiyin iyalbu - Sasirekha

பெண்மையின் இயல்பு - சசிரேகா : Penmaiyin iyalbu - Sasirekha
 

பெண்மையின் இயல்பு - சசிரேகா

சிறுகதை.

 

 

சிறுகதை - பெண்மையின் இயல்பு - சசிரேகா,

  

”அம்மா உன்னோட ஒரே போர், பழைய பஞ்சாங்கம் நீ, உன்கிட்ட போய் பேசறதே தப்பு, எப்ப பாரு, அட்வைஸ் பண்ற, நான் என்ன சின்ன குழந்தையா எனக்கும் எல்லாம் தெரியும், என்னை விடும்மா, நானே என்னை நல்லா பார்த்துக்குவேன்” என்றாள் பள்ளிப்படிப்பு முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் பருவ பெண் ராதா அதைக்கேட்டு அவளின் தாய் வசந்தியோ,

  

”என்ன பேச்சு பேசறா பாரு, ஸ்கூல் படிப்பு முடிஞ்சிடுச்சின்னா அவளுக்கு மெச்சூரிட்டு வந்துடுமா என்ன, இந்த வயசில நமக்கே இன்னும் யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு தெரியலை, எது பாதுகாப்பு, யார் ஏமாத்தறாங்க, இல்லை நாம நமக்கே தெரியாம ஏமாறிக்கிட்டு இருக்கோமா அதை கண்டுபிடிக்க திண்டாடறோம், இவள் என்னடான்னா நம்மளை விட பெரிய அனுபவசாலியாட்டும்  பேசி வைக்கிறாளே” என மனதுக்குள் நினைத்து குமுறியவர் அதற்காக மகளிடம் கோபப்பட்டு பேசினால் லாபமில்லை அதனால் அவளுக்கு இன்னும் தன் மீதே கண்மூடித்தனமான நம்பிக்கை வந்துவிடும், அதன்பின் யார் சொல்வதும் அவள் காதில் எட்டாது என நினைத்தவர் தன் மகளிடம் அன்பாக பேசினார்,

  

”அப்படியில்லைடி செல்லம், நம்ம ஊர்ல இல்லாத காலேஜா இதுல ஏதாவது ஒண்ணுத்துல சேர்ந்து படி, இதுக்காக இங்கிருந்து ரொம்ப தூரத்தில அதுலயும் வேற மாவட்டத்தில இருக்கற காலேஜ்லதான் படிக்கனுமா என்ன, அங்கயும் இங்க இருக்கற படிப்புதானே சொல்லித் தர்றாங்க” என பேசிவைக்க அதற்கு ராதாவோ,

  

”அய்யோ அம்மா உனக்கு ஒண்ணுமே தெரியலை, காலேஜ்ல எல்லாம் சொல்லித்தராங்க யார் இல்லைன்னா, ஆனா சொல்லிக் கொடுக்கற விதம் ஒவ்வொரு காலேஜ்லயும் மாறும், அதோட காம்பஸ் இன்டர்வியூ சிறப்பா நடத்தற காலேஜ்ல சேர்ந்தாதானே என் எதிர்காலத்துக்கு நல்லது” என பேச அசந்துவிட்டார் வசந்தி,

  

”எதிர்காலமா அடேங்கப்பா, எதிர்காலத்தை பத்தியெல்லாம் பேசறாளே அதென்ன காம்பஸ் இன்டர்வியூ, அது இங்க நடக்காதாம்மா” என மனதுள் நினைத்துக் கொண்டே அவளிடம்,

  

”ஏன்மா ராதா நீ சொன்ன இன்டர்வியூ நம்ம ஊர் காலேஜ்ல நடக்காதா என்ன”,

  

”நடக்குமே”,

  

”அப்புறம் எதுக்காக நீ வேற காலேஜ்ல சேர நினைக்கற”,

  

”அம்மா இந்த ஊர் காலேஜ்ல நடக்கற இன்டர்வியூல கலந்துக்கிட்டா கண்டிப்பா வேலை கிடைக்கும் ஆனா இந்த ஸ்டேட்லதான் கிடைக்கும், அதே நான் சொல்ற காலேஜ்ல சேர்ந்து படிச்சி காம்பஸ்ல செலக்ட் ஆனா நான் வெளிநாட்ல வேலைக்குப் போவேன்மா, டாலர்ஸ்ல சம்பளம் வாங்குவேன்மா, என்னோட ரேன்ஜே மாறிடும்” என்றாள் ராதா அதைக்கேட்டு விழிவிரிய ஆச்சர்யத்துடன் அவளையே ஏற இறங்கப் பார்த்தாள் வசந்தி ,

  

”என்ன வயசு ஆச்சி இவளுக்கு, 18 கூட முடியலை, அதுக்குள்ள வேலையை பத்தி பேசறா, டாலர்ங்கறா, ரேன்ஞ்ங்கறா, பேசறது நம்ம பொண்ணுதானா” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே பெருமூச்சுவிட்டவர்,

  

”சரிடி ஆனா வேலைக்காக அவ்ளோ தூரம் போகனுமா என்ன, அப்பாவுக்கும் எனக்கும் நீதானே எல்லாம், எங்களை விட்டு போக எப்படி உனக்கு மனசு வந்தது சொல்லு, நாம ஒண்ணா இருக்கலாமே” என தன்மையாக பேச ராதாவோ,