Chillzee KiMo Books - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - சசிரேகா : Neethane punnagai mannan un rani naane - Sasirekha

நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - சசிரேகா : Neethane punnagai mannan un rani naane - Sasirekha
 

தன் மீது விழுந்த பழிக்காக சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க வந்த நாயகியும் தன் மீது விழுந்த பழியால் திருமணம் ஆகாமல் இருக்கும் நாயகனும் சந்திக்கும் போது நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.

 

 


 

பாகம் 1.

  

திண்டுக்கல் மாவட்டம்.

  

கல்யாண மண்டபம்.

  

அழகுக்கே அழகு சேர்க்கும் விதமாக அலங்கார புடவையில் தெருவில் பவனி வரும் தேர் போல அழகாக இருந்தாள் மதுரிதா. அவளது முறை பையன் கௌசிக்கின் பிசினஸ் பார்ட்னரின் மகளின் திருமணத்திற்காக திண்டுக்கல் வந்திருந்தாள்.

  

மதுரிதா எவ்வளவு மறுத்தும் விடாப்பிடியாக அவளது தாய் பத்மா தனது அண்ணன் மகன் கௌசிக்குடன் சென்னையிலிருந்து அவளை திண்டுக்கல்லுக்கு அனுப்பிவைத்தார்.

  

மதுவுக்கு கௌசிக்குடன் வருவது விருப்பமேயில்லை. கௌசிக்குக்கு அவளை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்து அதிகமாகவே இருந்ததால் அவன் எந்த முக்கியமான இடங்களுக்குச் சென்றாலும் அவளையும் உடன் அழைத்துச் செல்வதை பழக்கமாக்கிக் கொண்டான். அவளை தன்னவள் என இவ்வுலகிற்கு அவன் அடிக்கடி காட்டிக்கொண்டே இருப்பான்.

  

கௌசிக் தன் தந்தையுடன் இருந்த நாட்களை விட மதுவின் தந்தை இளங்கோவனுடன் இருந்த நாட்களே அதிகம். அதுவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீட்டிற்குச் செல்வான் அதுவும் அவனது தாய் அழைத்தால் மட்டுமே இல்லையென்றால் அதுவும் இல்லை.  எந்நேரமும் மதுவின் வீட்டிலேயே இருப்பான்.

  

கௌசிக் ஒரு தந்திரமான பிசினஸ்மேன், ஏஸியிலேயே புழங்குபவன். மதுவின் தந்தை இளங்கோவனின் தொழில் லெதர் பிசினஸ் அதாவது ஆட்டுத்தோல் கொண்டு செய்யப்படும் அனைத்து பொருட்களை உற்பத்தி செய்வது அதை ஏற்றுமதி செய்வது என அனைத்திலும் கௌசிக் உடன் இருந்தான்.

  

பேருக்குத்தான் இளங்கோவன் முதலாளி ஆனால் மொத்த பொறுப்புகளுமே என்றோ கௌசிக்கின் கைகளில் மாட்டிக்கொண்டது. அதற்கு காரணம் இளங்கோவனின் மனைவி பத்மா கணவரை விட அண்ணன் குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்டவள். இதனால் இளங்கோவனால் எதையும் சொல்ல முடியவில்லை.

  

கௌசிக்கும் மிகுந்த புத்திசாலி, லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்து இளங்கோவனிடம் கொடுத்துக் கொண்டே இருந்தான். அவனுடைய எண்ணம், லட்சியம் எல்லாமே ஒன்றுதான் அது மதுரிதாவை மணப்பது மட்டும்தான்.

  

அவளை திருமணம் செய்துக்கொள்வது தவிர அவனுக்கு வேறு எந்த எண்ணமும் கிடையாது. பிரண்ட்ஸ் என்று யாரும் இல்லை, அவன் யாரையும் நண்பனாக கூட வைத்துக்கொள்ளவில்லை.

  

ஒரு நாள் முழுவதும் என்ன நடந்தது என்பதை மறக்காமல் இரவில் வீட்டுக்கு வந்த உடனே மதுவிடம் சொல்வதை பழக்கிக் கொண்டான். அந்த சமயங்களில் அவளை தன் தோழியாக நினைத்தான். மற்ற சமயங்களில் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப தன் எண்ணங்களை மாற்றிக்கொள்வதோடு அவளிடம் அணுகும் முறையையும் மாற்றிக் கொள்வான்.

  

கௌசிக் பார்க்க அழகன், தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தான். தினமும் உடற்பயிற்சி, யோகா என எதையுமே விட்டுவைப்பதில்லை. காலையில் 4 மணிக்கு எழுந்துவிட்டால்