காதலும் குடும்பமும் இரு கண்கள் போன்றவை. காதலுக்காக பெற்றவர்களை விட முடியாது. அதே நேரம் இதயத்தில் வாழும் காதலியை மறக்கவும் முடியாது.
நாரயணன் என்னும் இளைஞன் அது போன்ற ஒரு சூழலில் என்ன செய்கிறான்?
காதலால் அவன் குடும்பம் அழிந்ததா? இல்லை குடும்பத்துக்காகக் காதலை விட்டானா?
அவனது ஒன்று விட்ட சகோதரனின் தொல்லைகளை எப்படி சமாளித்தான்? அவை எல்லாம் எளிதில் நடந்ததா? எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான் அவன்? ஆனாலும் மனம் தளரவில்லேயே நாராயணன்?
வழி காட்டும் விண் மீன்கள். காதலும் குடும்பமும் கலந்து எழுதப்பட்ட சமூக நாவல். இன்றைய இளைஞர்களின் பொறுப்பும், அன்பும் அக்கறையும் அழகாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.
படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
நிலவே நீ சாட்சி...என்னும் இந்த நாவல் அருணா என்னும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது.
அவளது வாழ்வில் எல்லாமே இருந்தும் தாய் இல்லை என்ற குறை அவளை வாட்டுகிறது. அத்தையும் மாமாவும் ஏன் அவளது தகப்பனுமே அவளது தாயைப் பற்றிப் பேச மறுக்கிறார்கள். உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? என எதுவுமே தெரியவில்லை அருணாவுக்கும் அவளது தம்பி விஜய்க்கும். அருணாவுக்குக் காதலும் வர அதனைக் கொண்டாடுகிறாள். ஆனால்?
காதலன் சிவா வீட்டில் தாயறியாத பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். தந்தையிடமிருந்து எப்படியாவது தாயைப் பற்றிய செய்திகளைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் என பெரும் முயற்சி செய்கிறார்கள் தமக்கையும் தம்பியும். மாமனும் அத்தையும் வில்லங்களாக மாற அவர்களைக் கூட தூக்கியெறியத் துணிகிறார்கள்.
அவர்களது தாய் யாரெனத் தெரிந்ததா? தாயன்பு அவர்களுக்குக் கிடைத்ததா? காதல் கை கூடியதா?
அருணாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளப் படியுங்கள்.."நிலவே நீ சாட்சி...".
காதல் கலந்து சொல்லப்பட்ட நாவல் இது.
இரு இளம் மருத்துவர்கள் விக்னேஷும், சுமதியும். இருவரது கண்ணோட்டங்கள், லட்சியங்கள் எல்லாமே முற்றிலும் மாறானவை. விதி இவர்கள் இருவரையும் திருமணம் என்ற பந்தத்தில் இணைக்கிறது.
இருவரது ஈகோவும் முட்டிக்கொள்கிறது. அவற்றை ரகு என்னும் கயவன் விசிறி விடுகிறான். தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள சுமதியை தன்னுடையவளாக்கிக் கொள்ள என்னென்ன உண்டோ அத்தனையும் செய்கிறான். ஒரு கட்டத்தில் சுமதி அவன் விரித்த வலையில் நன்றாகவே சிக்கிக் கொள்கிறாள்.
அவள் மீண்டாளா? விக்னேஷ் சுமதி திருமணம் நிலைத்ததா? இருவரில் யார் நல்ல மருத்துவர் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?
படித்துப் பாருங்கள் "என் மேல் விழுந்த மழைத்துளியே!" நாவல்!
மேகமே தூதாக வா என்னும் இந்த நாவல் சுரேஷ் என்னும் இளைஞனின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது.
அவனது கனவுகள் லட்சியங்கள் எல்லாமே நடுத்தர வர்க்கத்திலிருந்து விடுபட்டு பெரும் பிசினஸ் மேனாக வேண்டும் என்பதே.
அதற்குத்தான் எத்தனை தடங்கல்கள்?
எப்போதும் தாய்ப் பாசம் பெரிதாகப் பேசப்படுகிறது. ஆனால் சில தாய்கள் தங்கள் மகள்களின் மேல் உள்ள பாசத்தில் மகன்களின் மன வருத்தத்தையும், அவர்களது உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்களது தேவை எப்போதும் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதற்கு மகன் துணை நிற்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதனால் மகன் மனதில் இருக்கும் ஆசைகளைக் கூட அவர்கள் பொருட் படுத்துவதில்லை. அப்படி ஒரு தாய் தான் சுரேஷின் அம்மா.
அக்கா சிவகாமியின் பொறாமை ஒருபுறம், அவள் கணவன் வாசுவின் பொறுப்பற்ற தன்மை ஒரு புறம் என சுரஷின் வாழ்க்கை பந்தாடப்படுகிறது.
அப்போது தென்றல் போல வந்தவள் தான் விஜி. இவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஆனால் அது நிறைவேறுமா?
சுரேஷின் கனவான பிசினஸ் தொடங்குவது மெய்ப்படுமா?
இவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் "மேகமே தூதாக வா..." நாவலை. படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!
டீனேஜ் எனப்படும் பதின் பருவம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சோதனையான காலம். அந்த நேரத்தில் தான் ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். வீட்டில் இருக்கும் பெற்றோர் அவர்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற வேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால் என்ன ஆகும்? எனச் சொல்கிறது எனது அடுத்த நாவலான "மலருக்குத் தென்றல் பகையானால்...".
தனுஜா பள்ளியில் படிக்கும் இளம் பெண். அவளது வீட்டின் நிலை ஏன் சரியில்லை? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்பதையெல்லாம் யோசித்துக் குழம்பி, வெளியில் ஆறுதல் தேடுகிறாள். தோழி மீரா கூடப் பகையாகத் தெரிகிறாள் ஒரு கட்டத்தில். தனுஜாவின் அந்த நிலையைப் பயன் படுத்தப் பார்க்கிறான் ஒரு கயவன்.
இறுதியில் தனுஜா என்ன ஆனாள்? அவளது எதிர்காலம் என்ன ஆகும்? அவளது தாய் தனது தவற்றை சரியான நேரத்தில் உணர்ந்து கொண்டாளா?
இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளப் படியுங்கள் புதிய நாவல் "மலருக்குத் தென்றல் பகையானால்.." உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.